உலக பசி குறியீடு தரவரிசை.. நாட்டின் இமேஜை கெடுக்க முயற்சி – இந்தியா சாடல்!

உலக பசி குறியீட்டு தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளது

உலக பசி குறியீட்டு தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளதோடு, நாட்டின் இமேஜை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சி என குற்றம் சாட்டி உள்ளது.
சர்வதேச அளவில் உணவு பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலக பசிக் குறியீடு (Global Hunger Index – GHI) வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தை சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பே என்ற நிறுவனமும் இந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பாண்டிற்கான உலக பசி குறியீட்டு பட்டியல் நேற்று வெளியானது.

121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் இந்தியா 107வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் 99வது இடத்திலும், இலங்கை 64வது இடத்திலும், வங்கதேசம் 84வது இடத்திலும் நேபாளம் 81வது இடத்திலும், மியான்மர் 71வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் 5க்கும் கீழ் சர்வதேச பசி குறியீட்டு மதிப்பெண் பெற்று பசி இல்லாத நாடாக முன்னணியில் உள்ளன.

இந்நிலையில், உலக பசி குறியீட்டு தரவரிசையை இந்தியா ஏற்க மறுத்துள்ளதோடு, நாட்டின் இமேஜை கெடுக்கும் தொடர்ச்சியான முயற்சி என குற்றம் சாட்டி உள்ளது. மேலும், பசியின் தவறான அளவீடு என்றும், குறியீட்டைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நான்கு காரணிகளில், மூன்று, குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பானவை என்றும், இந்த கணக்கெடுப்பு, மிகச்சிறிய அளவில் எடுக்கப்பட்டு உள்ளது என்றும் இந்தியா தெரிவித்து உள்ளது.