கரிகாலன் கட்டிய கல்லணை: தமிழர்களின் நீர் மேலாண்மை குறித்து நீங்கள் அறிவீர்களா? #தமிழர்_பெருமை

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஆறாவது கட்டுரை.)

தமிழரின் நீர் அறிவை ஒரு கட்டுரையில் முழுமையாகத் தொகுத்துவிட முடியாது. இதில் தமிழர் நீர் மேலாண்மை திறன் குறித்த அடிப்படையான ஒரு சித்திரத்தை மட்டும் தருகிறோம்.

நிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்கிறது தொல்காப்பியம். ‘நீரின்றி அமையாது உலகு’, நீர் ‘மிகுனும் குறையினும் நோய் செய்யும்’ என்கிறார் வள்ளுவர். நீரில்லாமல் இவ்வுலகம் இல்லை என்பதை பண்டைய தமிழர்கள் அறிந்து வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்கான வெளிப்படையான சான்று இது.

தமிழரின் நீர் மேலாண்மை திறன் மிக தொன்மையானது. சங்ககாலம் தொட்டு நீரை கொண்டாடி இருக்கிறார்கள், அதை பாதுகாத்து இருக்கிறார்கள். சங்க காலத்தின் முந்நீர் விழவு என நீருக்கு விழா எடுத்திருக்கிறார்கள் தமிழர்கள். பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவம் தமிழர் பண்பாட்டை நீர் பண்பாடு என்கிறார். நீர் நிலைகளை குறிப்பிட தமிழகத்தில் ஏராளமான சொற்கள் சங்காலம் முதல் இருந்தன என பட்டியலிடுகிறார் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.

நீர் நிலைகளை குறிக்கும் பெயர்கள்
அகழி, அசும்பு, அலந்தை, ஆவி, ஆறு, இலஞ்சி, இலந்தை, உடுவை, உவளகம், ஊரணி, எல்வை, ஏல்வை, ஏம்பல், ஏந்தல், ஏரி, ஓடை, கண்மாய், கயம், கால், கால்வாய், கிடங்கு, கிணறு, குட்டை,குட்டம், குண்டு, குண்டம், குண்டகம், குழி, குளம், கூவல், கூபம், கேணி, கோட்டகம், சட்டம், சலதரம், சிலந்தரம், சிக்கரி, சுனை, சூழி, சேங்கை, தடம், தடாகம், தம்மம், தாகம், தாங்கல், தரவு, பாக்கம், பொய்கை, மங்கல், மடு, மடுவு, மூழி, வலயம், வாக்கம், வாய்க்கால், வாவி – இவை அனைத்தும் சங்க காலம் முதல் தற்காலம் வரை நீர் நிலைகளை குறிப்பிடும் சில பெயர்கள் என தனது நீர் எழுத்து நூலில் பட்டியலிடுகிறார் நக்கீரன்.

நீர் நிலையை குறிக்க, இத்தனை பெயர்கள் இருப்பதே தமிழர்கள் வாழ்வு நீரோடு எவ்வளவு ஒன்றி இருந்தது என்பதற்கான சான்று.

ஒரு சமூகம், நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினால் மட்டுமே அதனை சுட்டும் இத்தனை பெயர்கள் இருக்க முடியும்.

ஹரப்பர் நாகரிகம், தமிழர் நாகரிகம் என ஐயமின்றி நிறுவப்படவில்லை என்றாலும் அந்த நாகரிகம் திராவிடர்களுடையதாக இருக்கலாம் என்று பல ஆய்வுகள் நிறுவி உள்ளன. இதனையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், இப்போதைய இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த ஆதிக்குடிகளின் நீர் மேலாண்மை அறிவு நமக்கு வியப்பை ஏற்படுத்தும்.

ஹரப்பர்களின் நீர் மேலாண்மை நவீனமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் இந்தியாவின் தொல் வரலாறு குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் டோனி ஜோசஃப்.

அவர் தனது ஆதி இந்தியர்கள் நூலில், “ஹரப்பர்களின் நீர் மேலாண்மைத் தொழில்நுட்பம் மிக நவீனமாக இருந்தது. பண்டைய உலக்லில் அது போன்ற ஒன்று வேறு எங்கும் இருக்கவே இல்லை, அவர்கள் நீரோடைகளின் குறுக்கே அணை கட்டுதல் உட்படப் பல வழிகளில் நீரைச் சேமிக்க முயற்சிகள் எடுத்திருக்கிறார்கள்,” என குறிப்பிடுகிறார்,

தமிழரின் நீர் மேலாண்மை குறித்து குறிப்பிடும் போது, அதில் கல்லணையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. சர்வதேச அளவில் தமிழரின் நீர் மேலாண்மை அறிவை பறைசாற்றியது கல்லணை.