இளைஞர்கள் போதைபொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது தேசிய மாணவர் படை மாணவர்களிடம் பேசிய அவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தினார்

உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், சில தடைகள் நமது முழு திறனையும் அடைவதை தடுக்கின்றன, அதில் போதைக்கு அடிமையாதலும் ஒன்று என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.

அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ள போதும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் இருக்க முடியவில்லை. அதிகமான மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போதையின் பிடியில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இளைஞர்களே இந்த தேசத்தின் எதிர்காலம் என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், அவர்கள் போதைக்கு அடிமையாகி விட்டால் அவர்களது எதிர்காலம் வீணாகி விடும் என கவலை தெரிவித்தார். எனவே, நமது சுதந்திரத்திற்காக நாம் மேற்கொண்ட போராட்டத்தை போதை ஒழிப்பிற்காக தற்போது கையிலெடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் போதையால் பாதிக்கப்பட்டவர்களிடம் இதன் பாதிப்புகளை எடுத்துக் கூறி அவர்களை மீட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். ராணுவம் எல்லையில் பாதுகாப்பது போல, தேசிய மாணவர் படையினர் போதைக்கு அடிமையாதல் போன்ற கண்ணுக்கு புலப்படாத எதிரியிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள 17 தேசிய மாணவர் படை இயக்குனரகங்களில் இருந்து காணொலி காட்சி வழியாக மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, முதலாவது இந்திய ராணுவ சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லவும் வலுவான, பாதுகாப்புடன் விரைவான தற்சார்புடன் கூடிய சரக்கு போக்குவரத்து முறையை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.